உடல் நலம் தேறி வருகிறார் கார் விபத்தில் சிக்கிய பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
கோவை : சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த டி.டி.வி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு முன் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். தற்போது தினகரன் அணியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
இவர் கடந்த 7-ஆம் தேதி தனது நண்பரின் இல்லத் திருமணத்திற்காக பெங்களூரில் இருந்து திண்டுக்கல்லிற்கு காரில் சென்றார். அப்போது திண்டுக்கல் அருகே ஏற்பட்ட விபத்தில் அவரது கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
இரண்டு கைகளிலும் பலத்த காயமடைந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி தற்போது மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த மருத்துவமனை நரம்பு மற்றும் எலும்பியல் துறைகளுக்கு மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புகழேந்தி உடல் நலம் தேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை நாஞ்சில் சம்பத் இன்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.