திதி கொடுக்க விடாமல் தடுப்பவர்கள் நல்லா இருப்பார்களா?... போயஸ் கார்டனில் வெற்றிவேல் சாபம்!
ஜெயலலிதாவிற்கு திதி கொடுக்க விடாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அநியாயம் செய்து வருவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : மறைந்த ஜெயலலிதாவிற்கு திதி கொடுக்க போயஸ்கார்டனுக்குள் ஐயர்களை அனுமதிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அநியாயம் செய்வதாக அதிமுக அம்மா அணியின் தணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு இன்று நட்சத்திர திதி என்பதால் போயஸ் கார்டனுக்குள் பூஜை செய்ய ஐயர்கள் சென்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஐயங்காரான ஜெயலலிதாவுக்கு ஆண்டு சிரார்த்தம் (திதி) அனுசரிக்கும் வரை மாதாமாதம் ஊனமாசியம் என்ற சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனையொட்டியே இன்று ஐயர்கள் பூஜை நடத்த போயஸ் கார்டனுக்கு சென்றுள்ளனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் பகுதியில் திரண்டனர். ஐயர்களை பூஜை செய்ய அனுமதிக்குமாறு காவல்துறையினருடன் வெற்றிவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அப்போதும் போலீஸ் திட்டவட்டமாக மறுத்துதிவட்டது.
திதி கொடுக்க அனுமதி மறுப்பு
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் கூறியதாவது : ஜெயலலிதாவிற்கு 5ம் தேதி நினைவு நாள் வருகிறது. அதற்கான திதி இன்று வருகிறது. ஜெயலலிதா இறந்த நாளின் திதி கடந்த 11 மாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான திதி கொடுக்க வந்த ஐயர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இன்று திதி கொடுக்க முடியவில்லை.
அனுமதி மறுத்துள்ள அரசு
ஏன் என்று போலீசாரிடம் கேட்டதற்கு அரசு யாரையும் உள்ளே விடக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் இன்னும் அரசு எந்த கருத்தையும் கேட்கவில்லை. வருமான வரி சோதனையை காரணம் காட்டி இன்று போலீசார் அனுமதி மறுக்கின்றனர். எங்களை போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்க வேண்டாம் பூஜை செய்ய அந்த ஐயர்களையாவது அனுமதியுங்கள் என்று தான் கேட்டோம் அதற்கு எடப்பாடி அரசின் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.
நல்லா இருப்பார்களா?
அரசு இன்று ஜெயலலிதாவிற்கு திதி கொடுக்கவிடாமல் செய்துவிட்டது, அவர்கள் நல்லா இருப்பார்களா?, நாங்கள் எங்கோ ஆற்றிலோ, குளத்திலோ வைத்து திதி கொடுத்துக் கொள்கிறோம், ஆனால் அவருக்கு திதி கொடுக்க முடியாமல் செய்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நல்லாவே இருக்க மாட்டார்கள் என்றார்.
எங்களை அனுமதிக்க வேண்டாம்
தினகரன் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன் கூறியதாவது : முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்த ஒரு வாரம் தான் இருக்கும் சூழலில் நட்சத்திர திதியை மாதா மாதம் கொடுத்து வருகிறோம். ஆனால் அரசு திட்டமிட்டே அனுமதி மறுக்கிறது, எங்களை அனுமதிக்கச் சொல்லவில்லை, புரோகிதர்களைத் தான் அனுமதிக்கச் சொல்கிறோம்.
உண்மை முகம்
போயஸ் கார்டன் எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று வருமான வரி சோதனை நடந்த போது அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இன்று உள்ளே அனுமதிக்க அரசு தடை போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கூத்தை அரங்கேற்றி வருகின்றனர் நாட்டு மக்கள், அதைத் தான் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம்.
அரசின் அடக்குமுறை
முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவிற்கு திதி கொடுப்பது ஒவ்வொரு அதிமுக தொண்டன், அமைச்சரின் கடமை. அவர் மறைந்தும் இன்றும் நம் அனைவரின் உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு திதி கொடுப்தையே காவல்துறையை வைத்து அடக்குகிறது எடப்பாடி, ஓ.பிஎஸ் அரசு.
விசுவாசிகள்
தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா அணி தான் அன்று வருமான வரி சோதனை நடந்த போதும் உடனே போயஸ் கார்டனுக்கு வந்தோம். இன்றும் திதி கொடுக்க அரசு அனுமதி மறுக்கிறது என்றதும் திரண்டு வந்திருக்கிறோம் நாங்கள் தான் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் என்று தெரிவித்தார்.