ஜெய் ஜெய் தினகரன்! ஜெயிச்சிட்டாரு தினகரன், முதல்வர் தினகரன்... ஆதரவாளர்களின் ஆரவார கோஷம்!
டிடிவி. தினகரன் வெற்றி பெற்றதையடுத்து அவரது தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை : டிடிவி. தினகரன் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அவருடைய இல்லம் முன் திரண்டிருக்கும் தொண்டர்கள் ஜெய் ஜெய் தினகரன், ஜெயிச்சிட்டாரு தினகரன், முதல்வர் தினகரன் என்ற விண்ணைப் பிளக்கும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
சென்னை ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகளைப் பெற்று தினகரன் அபார வெற்றி பெற்றுள்ளார். 19 சுற்று முடிவில் டிடிவி. தினகரன் 89 ஆயிரத்து 013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜெயலலிதாவை விடவும் தினகரன் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த தேர்தல் வெற்றி மூலம் மக்கள் ஜெயலலிதா இடத்தை தினகரனுக்கு கொடுத்துள்ளனர் என்று பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தினகரன் முன்னிலையில் இருந்ததால் அவரது தொண்டர்கள் குஷியில் இருந்தனர். இந்நிலையில் தினகரன் வெற்றி பெற்றது உறுதியான நிலையில் அவரது பெசன்ட் நகர் வீட்டின் தொண்டர்கள் திரண்டனர்.
அவர்கள் தினகரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற ராணி மேரி கல்லூரி புறப்பட்டு சென்ற போது, அங்கு சூழ்ந்திருந்த தொண்டர்கள் ஜெய் ஜெய் தினகரன், ஜெயிச்சிட்டாரு தினகரன் என்று கோஷமிட்டனர். இதே போன்று சசிகலா வாழ்க என்று சொன்னவர்கள், அடுத்த முதல்வர் தினகரன் என்றும் விண்ணைப் பிளக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.