ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மூவர் கைது!
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கை பரிசாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்க இருக்கும் இடைதேர்தலில் ஓட்டுக்காக, காமாட்சி விளக்குக் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரும் ஏப்ரல் 12ஆம் தேதி, சென்னை ஆர்கே நகர் தொகுதியில் இடைதேர்தல் நடக்கவுள்ளது. இந்த இடைதேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வேட்பாளரான டிடிவி தினகரனுக்கு ஓட்டு சேகரிக்கும் வகையில் அவரது ஆதர்வாளர்கள் ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட 40ஆவது வார்டில் திருவள்ளூர் குடியிருப்பில் நேற்று இரவு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதாக பறக்க்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அதனையடுத்து அங்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரி மோகன், அங்கு வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களும் காமாட்சி விளக்கும் வழங்கிக் கொண்டிருந்தவர்களைச் சுற்றி வளைத்தார். அப்போது சிவக்குமார், பிரசன்னா என்ற இருவர் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோபிநாத் என்பவரும் பிடிபட்டார்.
அவர்களிடமிருந்து 15 விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே டிடிவி தினகரனுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கருணாமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.