18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு... 6 மணி நேர விசாரணை.. நவ. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீமின்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி வாதம் முடிந்த நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தந்த ஆதரவை விளக்கிக் கொள்வதாக ஆளுநருக்கு கடிதம் அளித்தனர். இந்த விவகாரத்தில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இதே போன்று தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரியும், திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் விவகாரம் உள்ளிட்ட 7 வழக்குகளும் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிக்கு எதிரானது
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இன்று தனது வாதத்தின் போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது. உரிய விளக்கம் அளிக்க எம்எல்ஏக்களுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை என்றார்.
திமுகவுடன் கூட்டு இல்லை
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சிக்கு எதிராக வாக்களித்தார். ஆனால் கட்சி மாறாத நிலையில் 18 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் எப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவுடன் தினகரன் அணி கைகோர்த்து செயல்படுவதாக சொல்வதும் ஏற்க முடியாத கருத்து.
அபிஷேக் சிங்வி 6 மணி நேரம் வாதம்
தினகரன் தரப்பினர் தான் முதன்முதலில் ஆளுநரை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக மனு அளித்தனர். அதன் பின்னர் தான் திமுகவின் செயல்தலைவர் ஆளுநரை சந்தித்தார். எனவே எங்களை அவர்களுடன் இணைத்து திட்டமிட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அபிஷேக் சிங்வி 6 மணி நேரம் வாதாடியுள்ளார்.
நவம்பர் 24க்கு ஒத்திவைப்பு
டிடிவி தினகரன் தரப்பின் ஒரு வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி மட்டுமே தன்னுடைய வாதத்தை முடித்துள்ளார். மற்றொரு வழக்கறிஞரான ராமன் தனது தரப்பு வாதங்களை நவம்பர் 24ம் தேதி முன்வைக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.