பதவியை காப்பாற்ற பத்து லட்சம் கையெழுத்து.. தீவிர வேட்டையில் டிடிவி தினகரன்
10 லட்சம் அதிமுக தொண்டர்களிடம் கையெழுத்து வாங்குவதில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: 'அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என்று கூறி, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. இதே புகாரைத் தேர்தல் ஆணையத்தில் அளித்தார் பன்னீர்செல்வம் ஆதரவு அணியின் அ.தி.மு.க எம்.பி மைத்ரேயன்.
இதுகுறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, ஆர்.கே.நகருக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதத்தில் இறுதியாக, இரட்டை இலை சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும், ' இந்த உத்தரவு தற்காலிகமானதுதான். இரண்டு தரப்பினரும் நியாயமாக நடந்து கொள்வதற்காகத்தான் இப்படியொரு உத்தரவு பிறப்பித்தோம். ஏப்ரல் 17-ம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடக்கும்' எனவும் அறிவித்தது. வரும் 17ம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. இன்னும் பத்து நாட்களே இருப்பதால் 'எந்தச் சூழலிலும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான ஒரு நிலையை ஆணையம் எடுத்துவிடக் கூடாது' என்ற பதற்றத்தில் இருக்கிறார் தினகரன்.
கையெழுத்து
அதிமுக அம்மா கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஆர்.கே.நகர் தேர்தலில் நியாயப்படி எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில் நாங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அ.தி.மு.கவில் உள்ள அம்மா பேரவை, இளைஞர் பாசறை, எம்.ஜி.ஆர் மன்றம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகளிடமும் கையெழுத்து வாங்கினோம்" என்றார்.
ஆதரவு எங்களுக்குத்தான்
'ஒட்டுமொத்த அ.தி.மு.க நிர்வாகிகளும் எங்கள் பக்கம்தான் உள்ளனர்' எனத் தெரிவிக்கும் வகையில் ஆதாரத்தைத் தொகுத்திருந்தோம். பன்னீர்செல்வம் அணியினரோ, தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் கையெழுத்து வாங்கி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இவற்றை முழுமையாக ஆராய்ந்தாலே அனைத்தும் போலி என்பது தெரிந்துவிடும். இதைத் தேர்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. சின்னம் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்தது என்றும் அந்த நிர்வாகி ஆதங்கம் தெரிவித்தார்.
பத்து லட்சம் கையெழுத்து
மாவட்டத்தில் உள்ள வட்டம், பகுதி, ஒன்றியம், கிளை என அனைத்து நிர்வாகிகளிடமும் கையெழுத்து வாங்கும் வேலைகளை வேகப்படுத்தியிருக்கிறார் தினகரன். மாவட்டத்துக்கு முப்பதாயிரம் கையெழுத்துகளை வாங்க வேண்டும் என்பதுதான் தலைமையின் உத்தரவு. பத்து லட்சம் நிர்வாகிகளின் கையெழுத்துடன் கூடிய ஆதாரத்தை ஆணைத்தில் சமர்ப்பிக்கும் முடிவில் இருக்கிறார் தினகரன். இதில் அவர் வெற்றி பெற்றால்தான், துணைப் பொதுச் செயலாளர் பதவியும் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியும் தப்பிக்கும்.
ஒன்றரை கோடி
ஆனால், பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர்களோ, " எம்.ஜி.ஆர் வகுத்துக் கொடுத்த கட்சி விதிகளின்படிதான் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்களை நிர்பந்தித்துத்தான் பதவிக்கு வந்தார் சசிகலா. நியாயமான முறையில் தேர்தல் நடந்தால், அண்ணா தி.மு.கவின் ஒன்றரை கோடித் தொண்டர்களும் எங்களுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள்.
நேரம் போதாது
' நேரம் இன்மையால் இவ்வளவு ஆதாரங்களைத்தான் கொடுக்க முடிந்தது. அவகாசம் கிடைத்தால் ஒன்றரை கோடித் தொண்டர்களின் கையெழுத்தையும் வாங்கிக் கொடுப்போம்' என்று தேர்தல் ஆணையத்தில் எடுத்துக் கூறினோம். இதனை ஏற்றுக் கொண்டு சின்னத்தை முடக்கினர் தேர்தல் ஆணைய அதிகாரிகள். அ.தி.மு.கவின் ஒட்டுமொத்த தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். சின்னத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்சியே எங்கள் பக்கம் வரப் போகிறது" என்கின்றனர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.