தினகரன் தரப்பு எதிர்ப்பால் பாதிப்பில்லை... மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு!
அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க டிடிவி தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க டிடிவி தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 59 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இவர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் கோரிய தொப்பி சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நமது முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் டிடிவி தினகரன் தரப்பினர் முறையிட்டுள்ளனர்.
பி படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கையெழுத்து இடம் பெற வேண்டும், ஆனால் மதுசூதனனின் வேட்பு மனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் கையெழுத்தே உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதிமுகவின் சட்ட விதிப்படி வேட்பு மனு முன்மொழிவதில் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட வேண்டும். ஆனால் பொதுச்செயலாளர் கையெழுத்து இல்லாததால் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் சட்ட விதிகள் மாற்றப்பட்டு கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்படுவதாகவும், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு பதிலாக புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் உருவாக்கப்பட்டன. இதனிடையே தினகரன் தரப்பு எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டால் சின்னம் ஒதுக்கும் பணியில் கால தாமதம் ஏற்பட்டது. எனினும் இறுதியில் தினகரன் தரப்பின் எதிர்ப்பை நிராகரித்து மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது.