ஜெ.உயிரோடு இருக்கும்போதே தினகரன் போட்ட அந்த சதித்திட்டம்.. ஓபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு!
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே 2008ஆம் ஆண்டு முதல்வராக டிடிவி தினகரன் சதித்திட்டம் போட்டார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே 2008ஆம் ஆண்டு முதல்வராக டிடிவி தினகரன் சதித்திட்டம் போட்டார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டம் வாரியாக நடத்தி வருகின்றது. இந்நிலையில் 29வது மாவட்டமாக உதகையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். ஏராளமான தொண்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
தினகரனை வறுத்தெடுத்த ஓபிஎஸ்
உதகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும் டிடிவி தினகரனையும் ஓ.பன்னீர்செல்வம் வறுதெடுத்தார்.
நான்தான் சீனியர்
தன்னை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தது தான்தான் என டிடிவி தினகரன் தெரிவித்து வருவது பொய் என்றும் ஓபிஎஸ் கூறினார். மேலும் தினகரன் குறித்த பல திடுக்கிடும் தகவல்களையும் ஓபிஎஸ் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொகுதிக்குள் நுழையக்கூடாது
அதிமுகவில் 19 ஆண்டுகளாக நான் இருந்த நிலையில் எல்.கே.ஜி படிக்க அதாவது எம்பி தேர்தலுக்காக பெரியகுளம் வந்தவர் டிடிவி தினகரன் என்றும் அவர் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு டிடிவி தினகரன் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தபோதே அவரை அழைத்த ஜெயலலிதா இனி நீ பெரியகுளம் தொகுதிக்குள் நுழையக்கூடாது என்றார்.
ஜெயலலிதா தடைவிதித்தார்
மேலும் ராஜ்யசபா கூட்டத்திலும் டிடிவி தினகரன் பங்கேற்க ஜெயலலிதா தடை விதித்தார் என்றும் ஓபிஎஸ் கூறினார். மேலும் இனி அரசியல் குறித்து நீ கனவு காண கூடாது என்றும் ஜெயலலிதா கூறினார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
முதல்வராக சதித்திட்டம்
2008ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அவருக்கு எதிராக சதி செய்து முதல்வராக திட்டமிட்டவர் டிடிவி தினகரன் என்ற ஓபிஎஸ், இது தெரிந்ததால்தான் அவரை ஜெயலலிதா எச்சரித்து அனுப்பினார் என்றும் கூறினார்.
மன்னிப்பு கேட்டு சேர்ந்தார் சசி
மேலும் 2011ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை சேர்ந்த 16 பேரை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கினார் என்றும் அவர் கூறினார். 3 மாத்துக்குப்பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சசிகலா இணைந்தார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அசந்த நேரத்தில் வெற்றி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாங்கள் அசந்த நேரத்தில் டி.டி.வி. வெற்றி பெற்றுள்ளார் என்று பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார். மேலும் ஆர்.கே.நகரில் டி.டி.வி. எப்படி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் தமிழக மக்கள் சிந்திக்க தெரிந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
காளைமாடு கூட கன்றுபோடும்
இந்த தவறு இனி எந்த தொகுதியிலும் நடக்காது நாங்கள் அசரமாட்டோம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். காளை மாடு கூட கன்று போடும் ஆனால் டிடிவி தினகரன் இனி வெற்றி பெற முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.