டெல்லி லாபி கனஜோர்..... மீண்டும் தலைமை செயலராகிறார் ராமமோகன் ராவ்?
ராமமோகன் ராவ் தலைமைச் செயலர் பதவியை மீண்டும் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு தற்போது பணி வழங்கப்பட்டுள்ள ராமமோகன் ராவ் மீண்டும் தலைமைச் செயலராக நியமிக்கப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியவர் ராமமோகன் ராவ். தமிழக அரசின் தலைமை செயலகத்தில் ராமமோகன் ராவ் அறையிலும் கூட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது நாட்டையே அதிர வைத்தது.
இதன்பின்னர் ராமமோகன் ராவ் மீது எந்த ஒரு நடவடிக்கையுமே மேற்கொள்ளப்படவில்லை. தமிழக அரசு அவரை தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலில் மட்டும் வைத்திருந்தது.
திடீர் பதவி
இந்த நிலையில் திடீரென ராமமோகன் ராவுக்கு பதவி வழங்கியுள்ளது தமிழக அரசு. தமது டெல்லி லாபிகள் மூலமாகத்தான் மீண்டும் ராமமோகன் ராவ் பணிக்கு திரும்பியுள்ளாராம்.
ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி
ராமமோகன் ராவ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கும் தற்போதைய முதல்வர் எடப்பாடிக்கும் நல்ல நெருக்கம். தற்போது ராமமோகன் ராவுக்கு பணி வழங்கியிருப்பதன் மூலம் ஓபிஎஸ் தரப்பை மகிழ்ச்சியடை வைத்துள்ளாராம் எடப்பாடியார்.
தினகரன் கோரிக்கை நிராகரிப்பு
அத்துடன் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனை மண்ணை கவ்வ வைக்க அமைச்சர்களே ஜரூராக உள்ளடி வேலையும் பார்த்து வருகின்றனர். அதேபோல் மாவட்ட ஆட்சியர்களை மாற்ற வேண்டும் என தினகரன் வலியுறுத்தியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை நிராகரித்துவிட்டார்.
அப்செட்டில் சசி குடும்பம்
தற்போது ராமமோகன் ராவுக்கு தம்மை கேட்காமலேயே பணி நியமனம் வழங்கிவிட்டாரே எடப்பாடியார் என கடும் கோபத்தில் இருக்கிறாராம் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் தினகரன். இத்தகவல் சிறையில் உள்ள சசிகலாவுக்கும் தெரிவிக்கப்பட அவரும் படு அப்செட்டாகிவிட்டாராம். தற்போது மீண்டும் தலைமைச் செயலர் பதவியை பெறும் முனைப்பில் ராமமோகன் ராவ் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.