புதுவையில் 19 எம்.எல்.ஏக்களுடன் தினகரன் இன்று ஆலோசனை
புதுச்சேரியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று டிடிவி தினகரன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் உள்ள ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைந்த பின்னர் சசிகலா குடும்பத்தை மொத்தமாக வெளியேற்றுவோம் என்று கூறினர். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவோம் என்று கூறியதால் டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கான கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் அவர்கள் அளித்துள்ளனர்.
இதையடுத்து புதுவையில் உள்ள விண்ட் பிளவர் ரிசார்ட்டிற்குச் சென்ற டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3வது நாளாக அங்கு தங்கியுள்ளனர்.
பெண் எம்எல்ஏக்கள்
எம்எல்ஏக்கள் அனைவரும் ரிசார்ட் அருகே உள்ள கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட எம்.எல்.ஏக்கள் அங்குள்ள பூங்காவில் உடற்பயிற்சியும் மேற்கொண்டனர். பெண் எம்எல்ஏக்கள் சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.
ஆட்சியை கலைக்கமாட்டோம்
விண்ட் பிளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கத் தமிழ்செல்வன், தங்கத்துரை, முத்தையா ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன் ஆட்சியை கலைப்பது தங்கள் இலக்கு அல்ல என்றும், முதல்வரை மாற்றவே முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
தினகரன் ஆலோசனை
தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ரிசார்ட்டில் தங்கியிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், 19 எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக்குப் பின்னர் முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
விடுதி தர மறுப்பு
சின்னவீராம்பட்டினத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் இன்று வேறு விடுதிக்கு மாற உள்ளனர். புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள சன்வே தனியார் விடுதிக்கு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்குவதற்கு பல்வேறு விடுதி உரிமையாளர்கள் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.