அப்படியே திமுக போலவே நினைக்கிறார் தினகரன்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்ச்சல்
அதிமுக அழிய வேண்டும் என்று டிடிவி தினகரன் நினைப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக அழிய வேண்டும் என திமுக கருதுவதை போல் தினகரனும் நினைப்பதாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் தேர்தல் ஆணையத்தை அணுகினர். இதில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்நிலையில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி அணியினர் ஒப்புக் கொண்டுள்ளதால் அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரு அணிகளும் போராட்டம்
லாரி லாரியாக பிரமாண பத்திரங்களுடன் அதிமுகவின் இரு அணிகளும் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை போராடி வருகின்றனர். மேலும் அதிமுக தங்களுக்கே சொந்தம் என்று டிடிவி தினகரன் தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை இரு முறை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கே
டிடிவி தினகரன் அணியினர் இரட்டை இலை சின்னத்தை உண்மையான அதிமுகவான தங்களிடம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அந்த சின்னத்தை நிரந்தரமாக முடக்கிவிட வேண்டும் என்று கடந்த முறை விசாரணையில் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்திருந்தது.
திமுகவை போல்...
இரட்டை இலை தொடர்பாக நாளை டெல்லியில் நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்ள அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் வளர்ச்சியையும் மக்கள் செல்வாக்கையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிமுகவை அழிக்க திமுக திட்டமிட்டு வருகிறது. அதேபோல் டிடிவி தினகரனும் அதிமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.
தகுதி இல்லை
எம்ஜிஆர் குறித்தும் அதிமுக குறித்தும் பேசுவதற்கு தினகரனுக்கு எந்தவித தகுதியும் இல்லை. இரட்டை இலை சின்னமானது உண்மையான அதிமுகவான ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே கிடைக்கும். நாளை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கும் என்றார் அவர்.