தொப்பியிலிருந்து குல்லாவுக்கு மாறிய டிடிவி.தினகரன்.. மசூதி அருகே வாக்கு சேகரிப்பு!
ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் இன்று தொப்பிக்கு பதில் குல்லா அணிந்து பிரச்சாரம் செய்தார்.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் இன்று தொப்பிக்கு பதில் குல்லா அணிந்து பிரச்சாரம் செய்தார். முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ள தேர்தல் ஆணையம் டிடிவி தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியது.
தேர்தல் ஆணையத்தால் தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்ட நாளில் இருந்தே டிடிவி தினகரன் தொப்பியுடனே வலம் வருகிறார். மக்களிடம் தனது சின்னத்தை அடையாளப்படுத்தவே அவர் தொப்பியுடன் திரிவதாக கூறப்படுகிறுது.
எம்ஜிஆரின் சின்னம் தொப்பி
தொப்பியும் எம்ஜிஆரின் சின்னம் தான் என கூறிவரும் தினகரன், வேட்புமனு தாக்கல் செய்வற்கு கூட தொப்பி அணிந்தே சென்றார். தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
தொப்பியுடன் வலம் வரும் தினகரன்
டிடிவி தினகரனும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது தனது கட்சியின் சின்னமான தொப்பியை தலையில் அணிந்த படியே வலம் வருகிறார்.
குல்லாவுக்கு மாறிய டிடிவி.தினகரன்
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இஸ்லாமிய வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேரிக்கும் பணியில் டிடிவி தினகரன் ஈடுபட்டார். அப்போது வழக்கமாக அவர் அணியும் தொப்பியை அணியாமல் முஸ்லிம்கள் பயன்படுத்தும் குல்லாவை அணிந்திருந்தார்.
பள்ளி வாசல் முன்பு வாக்குசேகரிப்பு
முஸ்லிம் மக்களின் வாக்குகளை குறிவைத்தே அவர் குல்லா அணிந்து வந்து வாக்கு சேகரித்ததாகத் தெரிகிறது. அங்குள்ள பள்ளிவாசலின் முன்பு காத்திருந்த டிடிவி.தினகரன் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். இதற்கு அதிமுக எம்பி அன்வர் ராஜா ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.