ஆர்.கே.நகரில் ஜெயித்தாலும் டிடிவி தினகரன் ஜெயிலுக்குத்தான் போவார்.. இளங்கோவன் பரபர பேட்டி
தினகரன் ஜெயித்தாலும், தோற்றாலும் ஜெயிலுக்கு போவார். ஆர்.கே.நகர் மக்கள் ஜெயிலுக்கு போகும் நபருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் அவர் சிறை செல்வது உறுதி என்று, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோவைக்கு சென்றிருந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியது:
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
திருமாவுக்கு அழைப்பு
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், எதிர்காலத்தை கருதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
இரட்டை இலை முடக்கம்
இரட்டை இலை சின்னம் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் சின்னம் கேட்ட இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அளித்துள்ளனர். என்னை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் உள்ளது.
குற்றவாளி
அதிமுக சார்பில் ஆர்.கே. நகரில் குற்றவாளி நிறுத்தப்பட்டுள்ளார். தினகரன் ஜெயித்தாலும், தோற்றாலும் ஜெயிலுக்கு போவார். ஆர்.கே.நகர் மக்கள் ஜெயிலுக்கு போகும் நபருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
டெபாசிட் தேறாது
டி.டி.வி.தினகரன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். ஆனால் டி.டி.வி. தினகரன் டெபாசிட் வாங்குவதே சிரமம்.
பணப்பட்டுவாடா
ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் வினியோகம் தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் மக்களே தடுக்க வேண்டும். வயதில் மூத்தவரான மதுசூதனன் இந்த வயதல் தேர்தலில் நிற்பது அவசியமா என்று யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.