தை பிறந்தால் வழி பிறக்கத்தானே செய்யும்... தினகரனின் அட்ராசக்க பொங்கல் வாழ்த்து!
தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி. தினரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் நாளையொட்டி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் டிடிவி. தினகரன். பதரைப் போல ஒரு களையை போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்துள்ளவர்களை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம் என்றும் தினகரன் தன்னுடைய வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டிடிவி. தினகரனும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உழவர் பெருமக்கள், இயற்கையின் அருளாலும் தங்கள் கடின உழைப்பின் பலனாசும் இறைவனை வணங்கி, தம்மோடு உழைத்த கால்நடைகளுக்கும் தங்களின் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளும் பொன் நாள் பொங்கல் திருநாள்.
உழவர்களின் நலன் காக்க வேண்டும்
இது தமிழர்களின் தனிச்சிறப்பு மட்டுமல்ல, தமிழர்களின் உயர்பண்பின் அடையாளம். உழவர்களின் நலனை போற்றி பாதுகாத்திட வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உரியது.
உழவர்களுக்கான திட்டம் தீட்டியவர் ஜெ.
ஒரு அரசின் தலையாய கடமையும் இதுவேயாகும். இந்த எண்ணத்தை முதன்மையாகக் கொண்டு உழவர் பெருமக்களுக்கு அரிய பெரும் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தீட்டியவர் ஜெயலலிதா என்பதை நினைத்து பெருமையடைகிறேன்.
விவசாயிகள் மனநிறைவில்லை
ஆனால் இன்று ஜெயலலிதா எதிர்பார்த்தபடி மனநிறைவோடு உழவர் பெருமக்கள் உள்ளனரா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் தோழனாக அவர்களை பாதுகாக்கும் கவசமாகத் தான் அரசு இருந்திட வேண்டும்.
தை பிறந்தால்
இதற்கு முரணாக தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் ஒரு பதரைப் போல, ஒரு களையை போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்துவிட்டது. அதை நீக்கிட இந்த நன்நாளில் உறுதி ஏற்றிடுவோம். ஆம் தை பிறந்தால் வழி பிறக்கத்தானே செய்யும் என்றும் தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.