நாளை மேலூரில் முதல் பொதுக்கூட்டம்... சின்னம்மாவிடம் ஆசி பெற பெங்களூரு பறந்தார் தினகரன்
டிடிவி. தினகரன் திருச்சியில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய கையோடு பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.
திருச்சி : அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாள் முதலே தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள தினகரன், இன்று திருச்சியில் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு பெங்களூரு சென்றுள்ளார்.
அதிமுக மூன்றாக பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில் எஃகு கோட்டை எப்போது வீழும் என்று காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று நமது எம்ஜிஆர் நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் 3-ஆவது பெரிய இயக்கமாக உயரத்தில் உள்ள அதிமுக சிறிதளவும் கீழ் இறங்கிவிடக் கூடாது. முன்பைவிட கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்ஜிஆர் நூற்றாண்டில் உறுதியேற்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது எம்ஜிஆர் நாளேட்டில் பிரசுரமான கடிதம் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர். இது ஒருபுறமிருக்க மாமியார் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக தஞ்சாவூர் சென்ற தினகரன் சில நாட்களாக அங்கிருந்தே மேலூர் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். தினகரனுக்கு துணையாக நான் நிற்பேன் என்று சசிகலாவின் தம்பி திவாகரன் சொன்ன நிலையில் அங்கேயே கிடையாய் கிடக்கிறார் தினகரன் என்றும் பார்க்கப்படுகிறது.
அடுத்த திருப்பம் என்ன?
கட்சியினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை மேலூர் பொதுக்கூட்டத்தில் பாருங்கள் என்று தினகரன் தொடர்ந்து சொல்லி வருகிறார். எனவே அடுத்த அரசியல் திருப்பம் என்னவென்று தமிழக மக்களும், அதிமுகவினரும் காத்திருக்கின்றனர்.
எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி அறிவித்தது முதல் தஞ்சாவூரில் இருந்தே பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார் தினகரன். கடந்த இரண்டு நாட்களாகவே தஞ்சாவூரில் இருந்த தினகரன், இன்று காலையில் திருச்சியில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
சசிகலாவுடன் சந்திப்பு
திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 12 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தினகரன் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். நாளை மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தினகரன் நடத்தும் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தினகரன் பெங்களூரு சென்றுள்ளதால் அவர் சிறையில் சசிகலாவை சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசி பெற?
திஹார் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கட்சியில் தொடரப்போவதாக சிறையில் சசிகலாவை சந்தித்து கூறிவிட்டு வந்தார் தினகரன். ஆனால் சசிகலா பொறுத்திருக்கச் சொன்னதால் 60 நாட்கள் காத்திருந்துவிட்டு கடந்த முறை சசிகலாவை சந்தித்து கெடு முடிந்ததை சொல்லிவிட்டு புன்னகை மன்னனாக வெனிவந்தார் தினகரன். இந்நிலையில் இன்று மீண்டும் பெங்களூரு சென்றிருப்பது நிச்சயம் தனது சுற்றுப்பயணத்திற்காக ஆசி பெறத் தான் என்கின்றனர் அதிமுகவினர்.