உண்ணாவிரதப் பேச்சில் பாஜகவை ஒரு வரி கூட கண்டிக்கலையே... முதல்வருக்கு தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பாஜக அரசு பற்றி முதல்வர் பழனிசாமி ஒரு வரி கூட கண்டிக்கவில்லையே என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பாஜக அரசு பற்றி முதல்வர் பழனிசாமி ஒரு வரி கூட கண்டிக்கவில்லையே என்று தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மீது முதல்வர் பழனிசாமிக்கு எவ்வளவு பயம் இருக்கிறது என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்அறிவிப்பின்றி திடீரென முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
உண்ணாவிரத முடிவில் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி பிரச்சனைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினார். 1974ம் ஆண்டு திமுக ஆட்சியில், ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இன்றைக்கு நாம் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றும், சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் திமுக துரோகம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதிமுக உண்ணாவிரதம் நடைபெற்றது. ஆனால் பாஜக அரசு குறித்து முதல்வர் வாய்திறக்காமல் திமுக, காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றம்சாட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் முதல்வரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி. தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன், உண்ணாவிரதப் பந்தலில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஒரு வரி கூட கண்டிக்கவில்லையே என்று கூறியுள்ளார். பாஜகவிடம் பழனிசாமிக்கு எவ்வளவு பயம் என்பதை அவரது பேச்சே உணர்த்துகிறது.
முதல்வர் பழனிசாமி கடைசி வரை திமுக, காங்கிரஸை மட்டுமே குற்றம்சாட்டினார். ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்த பாஜக அரசு பற்றி எந்த கருத்தையும் கூறவில்லையே என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.