திருமங்கலம்- நேரு பார்க் சுரங்க மெட்ரோ சேவை தொடங்கியது.. சென்னை மக்கள் மகிழ்ச்சி
சென்னை திருமங்கலம்- நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. மக்களுக்கு இது புது அனுபவம்.
சென்னை: சென்னை திருமங்கலம்- நேரு பூங்கா இடையே ரயில் சேவை இன்று தொடங்கியது. இதை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை தொடங்கி கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சின்னமலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3-ஆவது கட்டமாக திருமங்கலத்திலிருந்து நேரு பூங்கா வரை நாளை முதல் சுரங்க ரயில் இயக்கப்படுகிறது.
வெங்கய்ய நாயுடு
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். முழுக்க முழுக்க சுரங்கப்பாதை வழியாகவே ரயில்கள் இயக்கப்பட்டன.
ரயில் நிலையங்கள்
நேரு பூங்கா முதல் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை, சுமார் எட்டு கி.மீட்டர் தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ஏழு ரயில் நிலையங்களை கொண்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
எந்தெந்த நிலையங்கள்
திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.40 முதல் ரூ.60 வரை வசூலிக்கப்படும்.
செல்போன் சிக்னல் கிடைக்காது
சுரங்கத்தில் இயக்கப்படும் ரயில் என்பதால் இதில் 3 மாதங்களுக்கு செல்போன் சிக்னல்கள் கிடைக்காது. அதன் பின்னர் பல்வேறு தொழில்நுட்ப ரீதியிலான வசதிகளை ஏற்படுத்தியவுடன் செல்போன் சிக்னல்களுடன் மக்கள் எந்த இடையூறும் இன்றி பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.