துருக்கியில் சிக்கிய இந்திய வீராங்கனைகளை மத்திய அரசு பாதுகாப்பாக மீட்க பெற்றோர்கள் வேண்டுகோள்
அங்காரா : ராணுவப் புரட்சி நடந்துள்ள துருக்கியில், 20 தமிழர்கள் உள்பட 186 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். எங்களை இந்திய அரசு பத்திரமாக மீட்க வேண்டும்' என்று துருக்கியிலிருந்து தமிழக வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களுடைய குழந்தைகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 148 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அஜித்குமார், தமிழ்ச்செல்வி, பிரியதர்ஷினி உள்பட 20 பேரும் அடக்கம்.
இந்த நிலையில், துருக்கில் நேற்று ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துருக்கியில் பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். அந்த வீரர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் ராணுவ புரட்சி காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால், போட்டி நடைபெறும் பகுதியில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. துருக்கியில் உள்ள ட்ராப்சோன் மாகாணத்தில் பள்ளிகளுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் கடந்த 11 ஆம் தேதி தொடங்கின.
WATCH: Stranded Indian athletes in Turkey who went for Int'l School Athletic Competition requests GoI to rescue themhttps://t.co/k3jlcP5NcS
— ANI (@ANI_news) July 16, 2016
தடகளம், நீச்சல், மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் 20க்கும் அதிகமான தமிழர்கள் உட்பட 148 இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். துருக்கியில் தற்போது பதற்றமான சூழல் இருப்பதால், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா அல்லது கைவிடப்படுமா என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
அங்காரா பகுதியில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் டிராப்சோன் நகரில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கியுள்ளனர். அங்காராவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், டிராப்சோன் பகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் எங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, எங்களின் குழந்தைகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ராயபுரத்தை சேர்ந்த வீராங்கனை தமிழ்ச்செல்வியின் தந்தை வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், எனது மகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.