இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது!
ராமேசுவரத்தில் அனுமதியின்றி நுழைந்த துருக்கி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
ராமேசுவரம்: இலங்கையில் இருந்து உரிய ஆவணங்களின்றி, படகு மூலம் ராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டை சேர்ந்தவரை உளவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள சேரன்கோட்டையில் அமைந்துள்ளது கடற்படை முகாம். அந்த பகுதியில் கடற்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைபர் படகில் அங்கு சுற்றித் திரிந்த வெளிநாட்டவர் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர் துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவரீம் என்பதும், கஜகஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்துவந்த அவர், கடைசியாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் படகில் வந்துள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர், இலங்கை மீனவர்கள் உதவியுடன் ஃபைபர் படகில் ராமேஸ்வரம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உளவு வேலைகளில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.