செலவு அதிகரிப்பால் ரஷ்ய நிறுவன காண்டிராக்ட் ரத்து... ஸ்தம்பித்தது சென்னை மெட்ரோ ரயில் பணிகள்!
சென்னை: செலவு அதிகரிப்பு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும், அதன் ரஷ்ய காண்டிராக்டருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அண்ணா சாலையில் சுரங்கம் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கின்றன. இதனால் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய நிறுவனமான மாஸ்மெட்ரோஸ்டிராய் என்ற நிறுவனம் அண்ணா சாலையில் பாதாள சுரங்கப் பாதை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கான கட்டணத் தொகை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் செலவுத் தொகையும் அதிகரித்துள்ளது. எனவே கூடுதல் தொகை கேட்டு அந்த நிறுவனம் உரியவர்களுக்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அதிரிடியாக அந்த நிறுவனத்தின் காண்டிராக்டை ரத்து செய்து விட்டனர்.
கூடுதல் செலவு...
இதுகுறித்து மாஸ்மெட்ரோஸ்டிராய் நிறுவனத்தைச் சேர்ந்த அருண் சிங் என்பவர் கூறுகையில், "சுரங்கப் பாதை அமைக்கும் பணியின்போது திட்டமிட்டதை விட மண் கடினமாக இருந்ததாலும், சுரங்கப் பாதையின் ஆழத்தை திடீர் திடீரென மாற்ற வேண்டி நேரிட்டதாலும் கூடுதல் செலவீனம் ஏற்பட்டது.
சொன்ன பணம் தரவில்லை...
முதலில் இதை கூடுதல் செலவீனக் கணக்கி்ல் சேர்த்துக் கொள்வதாக மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதை நம்பி நாங்களும் கூடுதல் இயந்திரங்களை பெரும் பொருட் செலவில் வாங்கி பணியில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் கூறியபடி மெட்ரோ நிறுவனம் எங்களுக்குப் பணத்தைத் தரவில்லை" என்றார்.
தடுமாறும் நிலை...
மேலும் அவர் கூறுகையில், "செலவு அதிகரிப்பு, ஸ்டீல் விலை உயர்வு, சிமெண்ட் விலை உயர்வு, எரிபொருள், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஆகியவை காரணமாக நாங்கள் மிகவும் தடுமாறும் நிலை ஏற்பட்டது.
சிரமம்...
மேலும் சுரங்கப் பாதையில் ரயில் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காமான் இந்தியா நிறுவனம் திட்டமிட்ட காலத்தில் தனது பணிகளை முடிக்கவில்லை. இதனால் சுரங்கப் பாதை தோண்டுவதிலும் சிரமம் ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்தம்பித்தது...
இப்படி பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் அதிரடியாக ரஷ்ய நிறுவனத்தின் காண்டிராக்டை ரத்து செய்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம். இதனால் அண்ணா சாலைப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.