தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம்.. பெட்ரோல் குண்டு வீச்சு.. அதிரடி படை குவிப்பு!
அண்ணாநகர் பகுதியில் இன்றும் கலவரம் தொடர்வதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் இன்றும் கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இதனால் அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் உச்ச நிலையை எட்டியுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும் தொடர்ந்து மாவட்டத்தின் பதற்றநிலை குறையாமல் உள்ளது.
13 பேர் துப்பாக்கி சூட்டிற்கு உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் மர்மநபர்கள் சிலரால் அரசு பேருந்துகள் உள்பட ஏராளமான வாகனங்களும், பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முத்தம்மாள் காலனி அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மேலும் தெருக்களில் உள்ள டயர்களையும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் எரித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அண்ணாநகர் பிரதான சாலையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் தடுப்புகள் அனைத்தும் முற்றிலுமாக பற்றி எரிகிறது. அணண்நகர் பகுதியில் இன்றும் கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அண்ணாநகர் 4,5,6-வது தெருக்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.