நீதிமன்ற அவமதிப்பு.. தூத்துக்குடி பேராயருக்கு வீட்டுக் காவல் தண்டனை: ஹைகோர்ட்
மதுரை: நீதிமன்றத்தை அவமதித்ததாக தூத்துக்குடி பேராயர் தேவசகாயத்திற்கு வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேராயர் தேவசகாயம், பொருளாளர் மோகன் ஆகியோருக்கு 2 வாரம் வீட்டுக் காவல் விதித்துள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை.
தூத்துக்குடி திருமண்டல சபைக்குழு தேர்தலின்போது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி செயல்பட்டதாக இந்த உத்தரவை ஹைகோர்ட் கிளை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டான்லி வேதமாணிக்கம் உள்ளிட்ட 4பேர், திருமண்டல சபைக்குழுத் தேர்தலில் தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதாக கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், அவர்களுக்கு வாக்குரிமை வழங்கி உத்தரவிட்டது.
ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை வழங்காமல் தேர்தல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் பேராயர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு தொடர்பாக, பேராயர் உட்ட 4 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பேராயருக்கு 2 வாரம் வீட்டுக்காவல், 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பேராயர் தரப்பு வழக்கறிஞர் கூறியதால், அவருக்கான தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்தார்.