தொகுதி சீட் அதிரடி பறிப்பு- கதறி அழும் தூத்துக்குடி அதிமுக “மாஜி” வேட்பாளர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர் அதிரடியாக மாற்றப்பட்டதால் அவர் வாயிலும், வயிற்றிலும் அடித்து கொண்டு கதறி கொண்டிருக்கிறார். இதனால் மேலும் பல வேட்பாளர்கள் பயத்தில் உளளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் ராமனுஜம் கணேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை அவர் வெகு சிறப்பாக கூட்டினார்.
இது மட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சார வாகனத்தில் பிரரச்சாரமும் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புகோட்டையில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்காக இவரது ஏற்பாட்டில் தொண்டர்களை வாகனத்தில் ஏற்றி சென்றனர். இவர்களுக்கு உணவாக புளியோதரை, தயிர்சாதம், குஸ்கா, அவித்த முட்டை வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளுக்காக அவர் ரூ.1 கோடி வரை செலவு செய்ததாக அவரது உறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவரை மாற்றி விட்டு திடீரென சீட்டிங் எம்எல்ஏவான கடம்பூர் ராஜூவை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதனால் ராமனுஜம் கணேஷ் கடும் அதிர்ச்சியில் உள்ளார். நம்பிக்கையுடன் கட்சிக்காக பெரும் செலவு செய்து விட்ட நிலையில் இப்படி நடந்து விட்டதோ என ஆற்றாமையுடன், வேதனையுடனும் வீட்டில் இருந்து வருகிறார். இதுகுறி்த்து தகவல் தெரிந்த தொண்டர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இதற்கிடையே வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு சாலை மறியல் நடக்க போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது போல் பாளை தொகுதி வேட்பாளர் தமிழ்மகன் உசேனும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர் புவனேஸ்வரனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.