திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்த விவகாரம்... விசாரிக்க குழு அமைப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வெளிகிரி பிரகாரம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் வள்ளிக்குகை அருகில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை காலை 10.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கார்த்திகை மாதம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். விபத்தையடுத்து கோயிலின் நடை சாத்தப்பட்ட நிலையில் பரிகார பூஜை செய்யப்பட்டு கோவிலின் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, அறநிலையத்துறை, பேரூராட்சி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் உடனடியாக விசாரணை மேற்கொள்வர். கோவில் பிரகாரத்தில் உள்ள 40 முதல் 45 ஆண்டு காலம் பழமை வாய்ந்த கட்டிடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்று ஆட்சியர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.