ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு- மாவட்ட ஆட்சியர்
ஸ்டெர்லைட் ஆலையில் அரசு குழு ஆய்வு நடத்துகிறது என்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதை அப்புறப்படுத்தப்படும் பணி நாளை தொடங்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று மாலை அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 2 மாதமாக இயங்கவில்லை. ஆலை வளாகத்தில் அமிலங்கள், ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வு விவரங்களை ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிப்போம் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. இக்குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் என்ன மாதிரியான கசிவு ஏற்பட்டிருக்கிறது? என்பது குறித்து இந்த குழு ஆய்வு நடத்தியது. பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஆய்வு விவரங்களை அளித்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலைக்குள் கந்த அமிலக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணி நாளை காலை தொடங்கும்.
இன்று இரவு முழுவதும் ஸ்டெர்லைட் ஆலையை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். கந்த அமிலத்தை அகற்ற தேவைப்பட்டால் டேங்கர்லாரி பயன்படுத்தப்படும் என்றார்.