அமெரிக்க கப்பலுக்கு டீசல்- கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
தூத்துக்குடி:அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
இந்திய எல்கைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பல் சீமேன் கார்டு ஓகியா கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கடலோர காவல்படையினரால் பிடிக்கப்பட்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அக்டோபர் 12ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கப்பலில் இருந்த 35 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கியது தொடர்பாக தூத்துக்குடியை மரிய ஆண்டன் விஜய், செல்லம், விஜய், ரஞ்சித் மற்றும் முருகேஷ் ஆகிய 5 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி மனு செய்தனர். இவர்களின் ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளுபடி ஆகவே டீசல் வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரிய ஆன்டன் விஜய் மற்றும் செல்லம் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மீதமுள்ள 3 பேர் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி விஜய், ரஞ்சித் மற்றும் முருகேஷ் ஆகியோருக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார். நீதிபதி அளித்த உத்தரவில் ஜாமீன் பெற்ற மூவரும் தினமும் காலையும் மாலையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.