சசிகலா புஷ்பா இந்தப் பக்கமே வரக் கூடாது.. திமுகவில் சேர விடாமல் தடுக்கும் சக்திகள்!
சென்னை: சசிகலா திமுகவுக்கு வந்து விடக் கூடாது என்பதில் சிலர் படு தீவிரமாக உள்ளார்களாம். அதேசமயம், சில முக்கியப் புள்ளிகள், அவர் வரட்டுமே, வந்தால் என்ன தப்பு என்று தலைமையிடம் கூறியுள்ளார்களாம்.
இப்படி இரு விதமான கருத்துக்கள் இருப்பதால்தான் இப்போதைக்கு சசிகலா புஷ்பாவை திமுகவில் சேர்ப்பதில்லை என்ற எண்ணத்தில் திமுக தலைமை இருப்பதாக சொல்ல்படுகிறது.
சசிகலா புஷ்பாவை பின்னாலிருந்து இயக்கும் அந்த "மண்" தலைவரும் கூட சசிகலா புஷ்பா திமுகவில் சேர பச்சைக் கொடி காட்டி விட்டாராம். ஆனால் திமுகவில் சிலர்தான் அவருக்கு சிவப்புக் கொடி காட்டிக் கொண்டிருப்பதால் திமுக பக்கம் அவர் தாவி வருவதற்கு சிக்கலாக உள்ளதாம்.
"புரட்சி எம்.பி."
அதிமுகவில் யாருமே ஜெயலலிதாவை எதிர்த்து மூச்சுக் கூட விட மாட்டார்கள். ஆனால் யாரும் எதிர்பாரத வகையில் சசிகலா புஷ்பா போட்ட போடு இன்னும் அதிமுகவை அதிர்ச்சியிலிருந்து மீட்கவில்லை.
எங்கு போகலாம்
கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்ட நிலையில், சுற்றிலும் வழக்குகள் பாயத் தொடங்கியுள்ள நிலையில் தனது பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு முக்கியக் கட்சியில் சேர்ந்தாக வேண்டிய நிலையில் உள்ளார் சசிகலா புஷ்பா.
திமுக
அவருடைய பட்டியலில் முதலில் இருப்பது திமுகதான். திமுகவிலிரும் கூட அவருக்கு பலர் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முக்கியமான பெண் தலைவர் உள்ளிட்ட சிலர் சசிகலாவை திமுகவில் இணைக்கலாம் என்று கூறி வருகிறார்களாம்.
தூத்துக்குடியிலிருந்து கடும் எதிர்ப்பு
ஆனால் தூத்துக்குடியிலிருந்து சசிகலா புஷ்பாவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி வந்துள்ளதாம். அதில் முக்கியமானவர்கள் அதிமுகவிலிருந்து தாவி வந்த அனிதா ராதாகிருஷ்ணனும், மதிமுகவிலிருந்து பாய்ந்து வந்த ஜோயலும்தான்.
வரக் கூடாது
சசிகலா புஷ்பா திமுகவுக்கு வந்தால் நமக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும். அதை விட முக்கியமாக நமது கட்சி எம்.பி.யை பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தியவர் அவர். அவரை எப்படி நமது கட்சிக்குள் கொண்டு வரலாம் என்று இவர்கள் கேட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
முரட்டு பக்தருக்கு ஓகேதானாம்
ஆனால் முரட்டு பக்தர் எனப்படும் மா.செ. பெரியசாமிக்கு, சசிகலா புஷ்பா வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லையாம். தாராளமாக அவரைச் சேர்க்கலாம் என்று அவரும், அவரது மகளும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் கூறி விட்டார்களாம்.
ஒருமித்த கருத்து இருந்தால் மட்டுமே
இருப்பினும் யாரையும் புறக்கணித்து விட்டு சசிகலா புஷ்பா விவகாரத்தில் முடிவெடுக்க திமுக தலைமை விரும்பவில்லையாம். மாறாக ஒருமித்த கருத்து வரும் வகையில் காத்திருக்க அது முடிவு செய்துள்ளதாம். மேலும் சசிகலா புஷ்பா விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கவும் திமுக தலைமை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.