"தம்பிடா.. அண்ணாச்சிடா.." தூத்துக்குடியில் பாசத்தைக் கொட்டிய "முரட்டு" பெரியசாமியும், ஜோயலும்!
தூத்துக்குடி: தம்பி ஜோயல் என்று பெரியசாமி பாசத்துடன் அழைக்க.. எல்லாமே அண்ணாச்சி வழி நடத்தலில்தான் என்று ஜோயல் பொங்கிப் பெருக தூத்துக்குடி மாவட்ட திமுகவே கலகலப்பாகியுள்ளது.
யாரும் எதிர்பாராத வகையில் மதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்குப் போய் விட்டார் வழக்கறிஞர் எஸ்.ஜோயல். அவர் மட்டுமல்லாமல், நெல்லை மாவட்ட செயலாளர்கள் சரவணன், பெருமாள், கன்னியாகுமரி மாவடட செயலாளர் தில்லைசெல்வம் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகளும் பலர் அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஜோயல் தூத்துக்குடியின் "ஸ்டிராங்மேன்" என்று திமுகவினரால் அழைக்கப்படும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாவட்ட தேர்தல்பணி பொறுப்பாளருமான என்.பெரியசாமி, முன்னாள் அமைச்சரும், மாநில மகளிரணி துணை செயலாளருமான, அவரது மகள் பி.கீதாஜீவன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
தம்பி ஜோயல்
அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் பெரியசாமி கூறுகையில், தம்பி ஜோயல் உள்ளிட்டவர்கள் எனது தலைவர் கலைஞர், பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் வைத்து திமுகவில் இணைந்துள்ளனர். அதன்பின்பு இன்று என்னை பார்க்கவந்த தம்பி ஜோயலை நான் அன்போடு வரவேற்கிறேன்.
எங்கள் தம்பி
எங்களுடன் இணைந்துள்ள தம்பி ஜோயலுடன் நாங்கள் அனைவரும் பாகுபாடு எதுவும் இன்றி ஒருங்கிணைந்து கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காகவும், தேர்தல் வெற்றிக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.
தாய்க் கழகத்திற்கு மீண்டும்
அதன்பின்பு ஜோயல் நிருபர்களிடம் பேசுகையில், மீண்டும் தாய்க் கழகத்தில் வந்து மகிழ்வுடன் இணைந்துள்ளோம். தலைவர் கலைஞர், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமான தளபதி முன்னிலையில் இணைந்துள்ளது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணாச்சி
எங்களை அறிவாலயத்தில் அன்போடு வரவேற்றது போன்று இன்று அண்ணாச்சியும் அன்போடு வரவேற்று பரிவோடு பேசியது உள்ளத்திற்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. தமிழகத்திலேயே மிகவும் மூத்த மாவட்ட செயலாளரான அண்ணாச்சியையும் மற்றும் முக்கிய நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளேன். அவர் கட்சியின் வளர்ச்சிக்காக என்னோடு இணைந்து பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடைசித் தொண்டனாக
இதன்படி வரும் சட்டமன்றதேர்தலில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள்விரோத அரசான அதிமுக அரசை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துவோம். இதற்காக அண்ணாச்சியின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற கட்சியின் கடைசித் தொண்டனாக, அடிமட்ட தொண்டனாக இருந்து பாடுபடுவேன் என்று இந்தநேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கடைசி வரை வீரம் "அஜீத் அன் கோ" மாதிரி சண்டை சச்சரவில்லாமல் இருந்தால் சரித்தான்!