தூத்துக்குடியில் நிறம் மாறிய வெள்ள நீர்- பொதுமக்கள் பீதி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேங்கியுள்ள நீர் நிறம் மாறி வருவதால் அங்கு இருக்கும் பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் கிடக்கின்றனர்.
கடம்பூர், ஓட்டப்பிடாரம், மணியாச்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தூத்துக்குடி நகருக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.
இதில் முத்தாம்மள் காலனி ஆதிபராசக்தி நகர், ஐயப்பன் நகர், நேராஜி நகர், குறிஞ்சி நகர், ரஹ்மத் நகர உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் வெள்ள நீரை அகற்ற கோரி பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் செய்தனர்.
பல நாட்களாக வெள்ளம் வடியாமல் இருப்பதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறி விட்டது. இந்த வெள்ள நீரில் கழிவு பொருட்கள், குப்பைகள், ப பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல பொருட்கள் மிதந்து வருவதால் அங்கு தூர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இந்த தண்ணீரில் கொசுக்களின் உற்பத்தி கடந்த சில நாட்களாக பெருகி வருவதால் டெங்கு. மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் சுகாதார துறையினரை முடுக்கி விட வேண்டும் என்றும், மருந்து, மாத்திரைகள் வினியோகம செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மிக கடுமையாக தூர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்து போய் கிடக்கின்றனர்.