வேலை வாங்கித் தருவதாக கூறி 14 பேரிடம் மோசடி.. சேமியா கம்பெனி ஓனர் கைது
தூத்துக்குடி: தமிழகத்திலுள்ள பிரபல வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 14 பேரிடம் பணமோசடி செய்த திண்டுக்கல் சேமியா நிறுவன உரிமையாளரை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பிரதீபன் என்ற சதீஷ்குமார். இவர் திண்டுக்கல், பழனி சாலையில் அன்னை சேமியா என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். இவர் தமிழகத்திலுள்ள பிரபல வங்கிகளான கரூர் வைசியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிகளில் வேலை வாங்கித் தருவாக கூறி பணம் பெற்றுக் கொண்டு போலியான வேலை நியமன உத்தரவு வழங்கி வந்துள்ளார்.
இதுதொடர்பாக கரூர் வைசியா வங்கி நிறுவனத்தினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் மோசடி நபரை கைது செய்திட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நடத்திய விசாரணையில், பிரதீபன், திருச்செந்தூர் அனந்தகிருஷ்ணன், வீரபாண்டியன்பட்டணம் அனுஷா, ஹெர்மினா, ஓரத்தநாடு அன்பரசன், மேலக்கரந்தை உதயராணி உட்பட 14பேரிடம் 50ஆயிரம், 80ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 81ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன உத்தரவு வழங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மோசடி நபரான பிரதீபனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடியிலுள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் தங்கியிருந்த பிரதீபனை புலனாய்வுக்குழு போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு கார், 4 செல்போன்கள், 2 லேப்டாப், வங்கிகளின் போலியான முத்திரைகள், பத்திரங்கள் மற்றும் 22 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடி நபரை கைது செய்த சிறப்பு புலனாய்வு குழுவினரை நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் பாராட்டினர்.