கடலில் கல்லை கட்டி இளங்கோவன், குஷ்பு உருவ பொம்மைகளை இறக்கிய தூத்துக்குடி மேயர்
தூத்துக்குடி: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் உருவ பொம்மைகளை தூத்துக்குடியில் கடலுக்கு எடுத்துச் சென்று கல்லை கட்டி கடலில் இறக்கி அ.தி.மு.க வினர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியதாக அ.தி.மு.கவினர் பல்வேறு வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் நெல்லை மேயர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் மேல் ஏறி நின்று போராட்டம் நடத்தினார். தூத்துக்குடி மேயர் அந்தோணி கிரேஸ் ஒருபடிக்கு மேல் போய் நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று விலங்குகளின் உருவம் கொண்ட படங்களில் இளங்கோவன், குஷ்பு படங்களை ஒட்டி எரித்து போராட்டம் நடத்தினர்.
பின் நேற்று மதியம் இளங்கோவன், குஷ்பு உருவ பொம்மைகளை படகு மூலம் கடலுக்குள் எடுத்து சென்றனர். அங்கு படகில் இருந்து இரு உருவ பொம்மைகளையும் கல்லை கட்டி கடலில் இறக்கி போராட்டம் நடத்தினர். 6 ஆவது நாளாக இளங்கோவனுக்கு எதிராக இன்னும் போராட்டங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.