தொடரும் கன மழையால் நெல்லை- தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து துண்டிப்பு
தூத்துக்குடி: தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரபள்ளம் குளத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி வருகிறது. இதனால் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்காக நெல்லை-தூத்துக்குடி சாலையை துண்டித்து நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தூதுக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி புறநகர் பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. உப்பாத்து ஓடை, கோரம்பள்ளம் குளம் மதகு உடைந்து சுமார் 5000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ராஜீவ் நகர், புதுக்கோட்டை, அந்தோணியார் புரம், மறவன் மடம், தபால் தந்தி அலுவலர் குடியிருப்பு உள்ளிட பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இன்று திங்கள் கிழமை நடபெற வேண்டிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் மாநகராட்சி, தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் 21 மதகுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது, இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்காக நெல்லை-தூத்துக்குடி சாலையை பெயர்த்து, நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக மறவன் மடம் பகுதி தனித்தீவு போல் காட்சியளிக்கிறது.
பேருந்துகள் ரத்து:
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் ரோடு வழியாக முக்காணி , ஆத்தூர்,சாகுபுரம்,குரும்பூர், வழியாக திருநெல்வேலிக்கு மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டது. தூத்துக்குடி- திருச்செந்தூர் பஸ்களும் ரத்து செய்யப்பட்டன.