தூத்துக்குடியை பிணக்குவியலாக மாற்றிய போலீஸ் துப்பாக்கி சூடு.. பெண்கள் உட்பட 10 பேர் பலியான கொடுமை
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், துப்பாக்கி சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்வர்களின் பெயர், ஊர் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
1) ஒட்டப்பிடாரம் ராமச்சந்திரபுரம் பொன் என்பரது மகன் புஇமு தலைவர் தமிழரசன் (28)
2) ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் (40)
3) திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கோயில் பிச்சை மகன் கிளாஸ்டன் (40)
4) தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த கந்தையா (55)
5) வெனிஸ்டா (17)
6) வினிதா (29)
7) தூத்துக்குடி தாமோதர் நகரை சேர்ந்த மணிராஜ் (33) ஆகியோர் போலீசாரின் துப்பாக்கி சூட்டால் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள்.
இதுதவிர மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தை ஒருங்கிணைத்த முக்கிய பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.
இதையடுத்து நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து சூறையாடி, 50க்கும் மேற்பட்ட வாகனங்களை தீக்கிரையாக்கினர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
முட்டிக்கு கீழேதான் சுட வேண்டும் என்ற அறிவுறுத்தல் உள்ள நிலையிலும், போராட்டக்காரர்களை சுட்டு கொன்றுள்ளது காவல்துறை. இதனால் தூத்துக்குடி நகரம் முழுக்க, பரபரப்பு நிலவுகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், வேல்முருகன், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மொத்த தூத்துக்குடி நகரமும் பொதுமக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், இப்போது மீண்டும் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.