தூத்துக்குடி: புதிய அனல் மின் நிலையத்தில் பயங்கர சத்தத்தால் பொது மக்கள் பீதி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையத்தில் சோதனை ஓட்டத்தின் போது பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் அருகே நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து தலா 500 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் உற்பத்தி திறன் கொண்ட 2 மின் நிலையங்களை அமைத்துள்ளது.
இதற்கு என்.டி.பி.எல் அனல் மின் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. தற்போது எரிபொருள் நிரப்பப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
விரைவில் இங்கு மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அங்குள்ள மின் உற்பத்தி இயந்திரங்களின் செயல்பாடுகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கிருந்து கடும் இரைச்சல் கேட்பதாக பொது மக்கள் புலம்புகின்றனர். பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென நள்ளிரவிலும் சோதனை ஓட்டம் நடப்பதால் கடும் சத்தத்தால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்படுகின்றனர்.
இந்த இரைச்சல் தெர்மல்நகர், கோவில்பிள்ளை, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, இனிகோ நகர், பாத்திமா நகர் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சோதனை ஓட்டம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நடக்கும் என முன்அறிவிப்பு செய்யவில்லை. இந்த அனல்மின் நிலைய உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதால்தான் பயங்கர சத்தம் ஏற்டுவதாகவும் கூறப்படுகிறது.