காட்டாற்று வெள்ளத்தில் நனைந்து போன கோதுமையை விற்கக் கூடாது.. மக்கள் கோரிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காட்டாற்று வெள்ளத்தால் நனைந்து சேதமான கோதுமையை விற்பனை செய்வதற்கு கலெக்டர் தடை விதித்திடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை விடாமல் பெய்துவந்த நிலையில் கடந்த 22ம் தேதி இரவு மணியாச்சி, ஓட்டப்பிடாரம், கயத்தார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக அப்பகுதிகளிலுள்ள குளம், குட்டைகள் நிறைந்து உபரிநீர் காட்டாற்று வெள்ளமாக மாறியது. இந்த மழை வெள்ளநீர் புதுக்கோட்டை காட்டாற்றில் கரைபுரண்டு வந்தது. காட்டாற்று வெள்ளநீர் செல்வதற்கு வழியில்லாமல் மறவன்மடம், அந்தோணியார்புரம் வழியாக கோரம்பள்ளம், சோரீஸ்புரம், கலெக்டர் அலுவலகம், பைபாஸ் சந்திப்பு, மடத்தூர், மீளவிட்டான், மீன்வளக்கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாநகர் பகுதிகளை சூழ்ந்தது.
குடோன்கள் மூழ்கின
திடீரென பெருகி வந்த காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை நான்குவழிச்சாலையிலுள்ள தனியார் குடோன்களுக்குள் எல்லாம் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆயிரம் டன் கோதுமையை இறக்குமதி செய்து தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி எதிரேயுள்ள ஒரு குடோனில் சேமித்து வைத்து இருந்தது. இந்த கோதுமை விற்பனை செய்வதற்காக சுமார் 2லட்சம் மூடைகளில் பேக்கிங் செய்து வைக்கப்பட்டு இருந்தது.
சேதம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்வதற்க்காக வைக்கப்பட்டிருந்த இந்த கோதுமை மூடைகள் அனைத்தும் காட்டாற்று வெள்ளத்தால் நனைந்து சேதமாகி விட்டது. அதிவேகமாக கரைபுரண்டு வந்த காட்டாற்று வெள்ளத்தால் கோதுமை மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த தனியார் குடோனின் ஒரு பகுதியும் இடிந்து சேதமாகியுள்ளது.
விற்க முயற்சிக்கும் தனியார் நிறுவனம்
இத்தகைய சூழ்நிலையில் மழைவெள்ளத்தில் நனைந்து சேதமான கோதுமையை தூத்துக்குடியை சேர்ந்த தனியார் ஷிப்பிங் நிறுவனம் விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தண்ணீரில் நனைந்த இந்த கோதுமையானது தரமற்றதாக மாறிவிட்டது. இதனை வாங்கி சாப்பிட்டால் தொற்றுநோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் எதிர்ப்பு
எனவே மாவட்ட கலெக்டர் தலைமையில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கோதுமை மூட்டை குடோனை உடனடியாக ஆய்வு செய்து மழைத் தண்ணீரில் நனைந்து தரமற்றதாக மாறியுள்ள கோதுமையை விற்பனை செய்வதற்கு தடை விதித்திடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஷமத்தனம்
தண்ணீரில் நனைந்து தரமற்றதாக மாறியுள்ள கோதுமையை விற்பனை செய்ய முயன்று வருவது வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.