தூத்துக்குடி போலீசாரின் 'எப்.ஐ.ஆர்கள் சொல்லும் சேதி என்ன?
தூத்துக்குடி போலீசாரின் எப்ஐஆர்கள் இனி போராட்டங்கள் நடத்தக் கூடாது என்கிறது.
Recommended Video
தூத்துக்குடி: 100 நாட்கள் அமைதிவழியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களை எப்.ஐ.ஆர்களில் கொலைகாரர்களாக சித்தரித்திருப்பது பொதுமக்களுக்கு எதிரான அடக்குமுறைப் போக்கில் அரசு இருப்பதாக உணர்த்தும் வகையில் உள்ளது.
தூத்துக்குடி சம்பவங்கள் தொடர்பான அரசின் எப்.ஐ.ஆர்.கள் ஒவ்வொன்றும் பகீர் ரகம். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை
10,000 பேர் திரண்டு வந்தார்கள்... போலீசாரை கொல்வதற்காகவே வந்தார்கள்... திரேஸ்புரத்தில் 500 பேர் பெட்ரோல் பாம்களுடன் கொலை வெறியோடு வந்தனர் என்றெல்லாம் கூறுகிறது போலீஸின் எப்.ஐ.ஆர். போராட்டத்தில் பங்கேற்ற அத்தனை பேரும் அரிவாள், கத்தி, பெட்ரோல் பாமுடன் வந்ததாக அப்பட்டமாகவே சொல்கிறது எப்.ஐ.ஆர்.
இப்படி பேசுகிறது எப்ஐஆர்
போராடும் மக்களை கொலைகாரர்களாக்கி, போராட்டத்தின் முன்னணியில் இருப்பவர்களை கொலை செய்து ஸ்டெர்லைட் எனும் ஒரு நாசகார நிறுவனத்துக்காக தன்னுடைய அத்தனை பயங்கர முகத்தையும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுகளில் காட்டி மிரட்டியது போலீஸ். பொதுமக்களை அமைதியாக கலைந்து செல்ல அறிவித்தோம். முட்டிக்கு கீழே தடியடி நடத்தினோம். ஆனாலும் கொலைவெறியோடு பொதுமக்கள் பாய்ந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று கூறுகிறது முதல் தகவல் அறிக்கை.
போலீசாரின் வன்முறை
ஆனால் நடந்த அத்தனை காட்சிகளையும் தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டுதான் இருந்தன. மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் திட்டமிட்ட வன்முறைகளை போலீஸே நடத்தியது என்பதுதான் அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது.
சில நிமிடங்களில் சாத்தியம் எப்படி?
இதனால்தான் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் முன்னேறினர். அப்படி முன்னேறிய சில நிமிடங்களிலேயே அத்தனை வாகனங்கள் எரிக்கப்பட்டன; ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது என்கிறது போலீஸ். குறுகிய காலத்திற்குள் எப்படி இத்தனை தீக்கிரைகளை பொதுமக்களால் செய்ய முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது.
எப்ஐஆர் எச்சரிக்கை
தமிழகத்தில் மக்கள் நலனுக்கான போராட்டங்கள் இனி முன்னெடுக்கப்படக் கூடாது என்பதில் அரசு தரப்பு திட்டவட்டமாக உள்ளதன் வெளிப்பாடுதான் தூத்துக்குடி எப்.ஐ.ஆர்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இனி போராட்டங்கள் நடந்தால் எப்படியான உச்சகட்ட நடவடிக்கைக்கும் அரசு தயாராக இருக்கிறது; எந்தவிதமான அடக்குமுறைக்கும் அஞ்சாது என்பதைத்தான் இந்த எப்.ஐ.ஆர்கள் வெளிப்படுத்துகின்றன என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாகும்.