"ஆண்மை விருத்தி" மருந்து தயாரிக்கப் பயன்படும் கடல் அட்டைகள்... 2 பேர் கைது!
வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் வாழும் அரிய வகை வன உயிரினங்களுள் கடல் அட்டையும் ஒன்று. அருகி வரும் இந்த கடல் அட்டைகளை பயன்படுத்தி ஆண்மை விருத்தி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கடல் அட்டைகளை பிடிக்கவும், வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை அவ்வப்போது பிடித்து கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் அரிய வகை கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக மரைன் போலீசாருக்க ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையிலான போலீசார் மடத்தூர் பகுதியில் திடீர் சோதனையில ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள திரவிய ரத்தினம் நகரில் ஒரு தனியார் நிறுவனத்திற்குள் அமைந்துள்ள குடியிருப்பில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று டிரம்ப்களில் பதப்படுத்தப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளையும், பதப்படுத்த பயன்படுத்திய கேஸ் ஸ்டவ், கடத்தி வர பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இதனை பதுக்கி வைத்ததாக தூத்துக்குடி கேடிசி நகரை சேர்ந்த முருகன், ரவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.