தூத்துக்குடி மேயர் தேர்தல்: அ.தி.மு.க., மாற்று வேட்பாளர் மனு திடீர் தள்ளுபடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., மாற்று வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெறாத நிலையில் தேர்தல் ஆணையம் அவரது மனுவை திடீரென தள்ளுபடி செய்துள்ளது.
தூத்துக்குடி மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க, வேட்பாளருக்கு மாற்றாக அக்கட்சியை சேர்ந்த தனலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையின் போது, தனலட்சுமியின் மனு தள்ளுபடி செய்யப்படவில்லை.
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று அவர் வாபஸ் பெறவும் இல்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவரை சுயேட்சை வேட்பாளராக கருதுவதாக கூறினர்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில், தனலட்சுமியின் மனுவை மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்துஅ.தி.மு.க., பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 7 பேர் போட்டியில் உள்ளனர்.
மாற்று வேட்பாளரே வாபஸ் பெறாத நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அவரது மனுவை தள்ளுபடி செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.