தூத்துக்குடி புனிதா பாலியல் வன்கொடுமை: ஓராண்டாகியும் கிடைக்காத நீதி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்று ஓராண்டு ஆகியும் இன்னும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2012, டிசம்பர் 20. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரை அடுத்துள்ள கிளாக்குளத்தில் அரையாண்டுத் தேர்வு எழுதுவதற்காக மாணவி புனிதா பள்ளிக்குச் சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் காலை, தாதன்குளம் ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார் புனிதா. இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்து புனிதாவை கொலை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம் பாறைகுட்டத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே 17 ஆம் தேதி புனிதா தொடர்பான வழக்கு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்படாததே வழக்கு தாமதம் ஆவதற்கு காரணம் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். புனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளாக உள்ளது.
டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேசமயம் தூத்துக்குடி மாவட்ட மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்து ஓராண்டு ஆகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.