தூத்துக்குடி: கொல்லப்பட்ட மாணவி ஸ்னோலின் உடல் நல்லடக்கம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு காரணமாக உயிரிழந்த மாணவி ஸ்னோலின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு காரணமாக உயிரிழந்த மாணவி ஸ்னோலின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதில் மாணவி ஸ்னோலின் போலீசால் மூர்க்கமாக துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலுக்கு தற்போது இறுதி சடங்கு செய்யப்பட்டது.
மாணவி ஸ்னோலின்
இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் மிகவும் இளவயது கொண்டவர், மாணவி ஸ்னோலின். 17 வயதே கொண்ட இவர் மீனவ குடும்பம் வசிக்கும் காரப்பேட்டையில் வசித்து வந்தார். அந்த பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து இவர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களமிறங்கினார். இவர் தன் அம்மாவுடன் சேர்ந்து கடைசியாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
|
வாய் வழியாக வந்தது
போராட்டத்தில் இவர் முன்னின்று போராடி இருக்கிறார். அமைதியாக போராடிய இவரை, பின் மண்டையிலேயே சுட்டு இருக்கிறார்கள். பின் மண்டையில் குண்டு பாய்ந்து வாய் வழியாக குண்டு வெளியேறியதாக ஸ்னோலினின் தாய் பேட்டியளித்துள்ளார். சம்பவ இடத்திலேயே இவர் மரணம் அடைந்தார். அதன்பின் சரியாக 12 நாட்கள் ஸ்னோலின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது.
|
பிரேத பரிசோதனை செய்யப்பட்டது
ஸ்னோலினுக்கு முதல் பிரேத பரிசோதனை முடித்து பின் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வீடியோ பதிவும் நடந்தது. நேற்று வரை ஸ்னோலின் உடலை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து வந்தனர். கடைசியில் இன்று காலை ஸ்னோலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காலை 8 மணிக்கு பின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
|
இறுதி சடங்கு
துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்னோலின் இறுதி சடங்கு நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 20க்கும் மேற்பட்ட குருமார்கள் பங்கேற்று உடலை கிறிஸ்துவ வழக்கப்படி நல்லடக்கம் செய்தனர். பொதுமக்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.