தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 3 கட்டமாக விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் திட்டம்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் மொத்தம் மூன்று கட்டமாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் மொத்தம் மூன்று கட்டமாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரண்டு வாரம் முன்பு நடந்த போராட்டதின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் மோசமாக காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று அவர் விசாரணையை தொடங்குகிறார். விசாரணை ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
பொதுமக்கள் தூத்துக்குடி விசாரணை அலுவலகத்தில் வந்து தங்கள் வாக்கு மூலங்களை தெரிவிக்கலாம். பொதுமக்கள் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் நடந்ததை கூற வேண்டும். ஜூன் 22ம் தேதிக்குள் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். காலம் தவறினால் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படும்.
துப்பாக்கி சூடு குறித்து கைவசம் வீடியோக்கள் இருந்தால் எடிட் செய்யாமல் ஒரு வாரத்திற்குள் அளிக்கலாம். எடிட் செய்யாத வீடியோக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தூத்துக்குடியில் உள்ள விசாரணை அலுவலகத்தில் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யலாம். இந்த விசாரணை மொத்தமாக மூன்று கட்டமாக செய்யப்படும்.
முதற்கட்டமாக மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களும் விசாரணை செய்யப்படுவார்கள். சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.
இரண்டாவது கட்டமாக ஊடகவியலாளர்கள் தங்கள் வாக்கு மூலங்களை தெரிவிக்கலாம். நேரில் சம்பவங்களை பார்த்து வீடியோ எடுத்தவர்கள் அதை அளிக்கலாம்.
மூன்றாவது கட்டமாக காவல் துறையிடம் விசாரணை நடத்தப்படும். உயரதிகாரிகள் உட்பட காவல் துறையினரும் விசாரணை செய்யப்படுவார்கள்.மக்கள், போலீஸ், செய்தியாளர்கள் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். நாளை ஆட்சியர் அலுவலகம் ஸ்டெர்லைட் குடியிருப்பில் விசாரணை நடத்தப்படும், என்று அருணா ஜெகதீசன் குறிப்பிட்டுள்ளார்.