தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் அறுந்து தொங்கும் கன்வேயர் பெல்ட் - மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அறுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரிகள் துறைமுகத்தில் இருந்து நேரடியாக அனல் மின் நிலையத்துக்குள் கொண்டு செல்ல வசதியாக கன்வேயர் பெல்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்களில் ஏற்படும் தீ விபத்துகளால் பல கோடி பாதிப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் இந்த கண்வேயர் பெல்ட்கள் தரமில்லாதவை என்பதுதான். இங்குள்ள கன்வேயர் பெல்டுகளில் முதலில் உள்ள கன்வேயர் பெல்ட் மிகவும் பழையதாகி விட்டது.
இந்நிலையில் இந்த கன்வேயர் பெல்டில் நேற்று நிலக்கரி வராததால் இயங்கவில்லை. இதனால் அங்கு பராமரிப்பு பணி நடந்தது. அப்போது கன்வேயர் பெல்டின் கேபின் பகுதியின் நடுவே திடீரென இரு இரும்பு தாங்கிகளுக்கு மத்தியில் உள்ள பகுதி உடைந்தது. இதனால் உயர்ந்த வாக்கில் சாய்ந்த வடிவில் செல்லும் கன்வேயர் பெல்ட் அறுந்து யூ வடிவில் தொங்கியது.
அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எந்த நேரமும் நிலக்கரி கப்பல் வரலாம் என்பதால் அறுந்த கன்வேயர் பெல்ட்டை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.