தூத்துக்குடி நகரில் ஆங்காங்கே மருந்து கடைகள், மளிகை கடைகள் திறப்பு!
தூத்துக்குடியில் கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில், தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பி கொண்டிருக்கிறது. இதனையடுத்து அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி போராட்டத்தினை தொடர்ந்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்த காரணத்தினால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் கடந்த கடந்த மூன்று நாட்களாக கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
முடங்கிய இயல்புவாழ்க்கை
பால் உட்பட எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் இல்லாத காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஒட்டுமொத்தமாக முடங்கியது. மாநகராட்சி சார்பில் குடிக்க தண்ணீரும் இல்லாமல், மின்சாரமும் இல்லாமல் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் வெளியே எங்கும் மக்களால் செல்ல முடியாமல் அவதியுற்றனர். இதனால் பெரும்பாலானோர் உணவின்றி தவித்தனர்.
நோயாளிகளுக்கு இலவச உணவு
3-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனை நோயாளிகள், மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கும் அவதியுற்றனர். இதனால் அவர்களுக்கு இலவச உணவு அளிக்கப்பட்டது. மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் இருந்து இந்த இலவச உணவு வழங்கப்பட்டது. இதனை ஏராளமானோர் சாப்பிட்டு பசியாறினர்.
இஸ்லாமியர்களின் நெகிழ்வு சம்பவம்
தூத்துக்குடி செய்திகளை திரட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் பலர் மாவட்டத்தில் திரண்டிருந்தனர். அதேபோல பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவர்களும் உணவின்றி காலை முதல் தவித்து வந்தனர். பெட்டிக்கடை ஒன்று கூட இல்லாததால் கடும் அவதிக்குள்ளாயினர். ஆயினும் அங்கிருந்த இஸ்லாமிய அமைப்புகள் போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நோன்பு கஞ்சியை உணவாக அளித்தனர். பொதுவாக மாலை 6.30 மணிக்கு மேல்தான் நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்றாலும் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசாரின் பசியை கருதி முன்னதாகவே வழங்கப்பட்டது.
ரயில்கள் ஓடதொடங்கின
இந்நிலையில், மக்களுக்கு அத்தியாவசிய கடைகளை திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தது. நாளைக்குள் கடையை திறக்கவும் மும்முரம் காட்டியது. தற்போது தூத்துக்குடியில் நகரின் ஆங்காங்கே மருந்து கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை என்றாலும் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்களும் இயங்க தொடங்கியுள்ளன. ஆனால் பேருந்துகள் ஏதும் இயங்கவில்லை. அதேபோல, தூத்துக்குடியிலிருந்து ரயில்களும் இயங்க தொடங்கின. அதன்படி தூத்துக்குடியிலிருந்து மைசூரு விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலிக்கு ரயில்கள் புறப்பட்டன. அதனை தொடர்ந்து மற்ற ரயில்களும் வெளி ஊர்களுக்கு புறப்பட தயாராக உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.