அமெரிக்க கப்பலுக்கு டீசல் சப்ளை - 7 பேரிடம் விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி!
இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலை கடந்த மாதம் 11ந் தேதி கடலோர காவல் படையினர் பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கியூ பிரிவு போலீசார் கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட 35 ஊழியர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 35 நவீன ரக ஆயுதங்கள், 5680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 35 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் கப்பல் கேப்டன் டட்னிக் வாலாண்டின், தலைமை பொறியாளர் லலித்குமார், அவர்களுக்கு சட்ட விரோதமாக டீசல் சப்ளை செய்த 5 பேரிடமும் தனியாக விசாரணை நடத்திட அனுமதி கோரி சுங்கதுறை புலனாய்வு துறையினர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம் மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை புழல் சிறையில் இருக்கும் கப்பல் கேப்டன் டட்னிக் வாலண்டின், பாளையங்கோ்ட்டை மத்திய சிறையில் இருக்கும் லலித்குமார் ஆகியோரிடம் ஒருநாள் விசாரணை நடத்தவும், டீசல் சப்ளை செய்ததாக கைதான ஸ்ரீவைகுண்டம் சிறையில் உள்ள முருகேசன், செல்வம், மரிய ஆண்டன் விஜய், ரஞ்சித், விஜய் ஆகியோரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தவும் சுங்கத்துறையினருக்கு அனுமதி அளித்தார்.