தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மினி மரத்தான் ஓட்டம்
தூத்துக்குடி: சுற்று சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக நாளை தூத்துக்குடி துறைமுகம் சார்பில் மினி மரத்தான் நடக்கிறது.
இதில் 15 வயதுக்கு மேலும் 40 வயதுக்குள்ளும் இருக்கும் ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.
மினி மராத்தான் போட்டியில் பங்கு பெற இருப்பவர்கள் தங்கள் பெயர்களை பழைய துறைமுகம் அருகே உள்ள வஉ சிதம்பரனார் துறைமுகம் சிஎச்டி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணி முதல் இரவு8 மணி வரை பதிவு செய்யலாம். அவர்களுக்கு அடையாள எண் கொடுக்கப்படும். அதனை அவர்கள் பெற்று கொள்ள வேண்டும்.
பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பனியன் வழங்கப்படும். வெளியூரிலிருந்து வரும் போட்டியாளர்கள் தங்குவதற்காக சிஎச்டி கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கான தூரம் 10 கிமீயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் முதலிடம் பிடிக்கும் நபர்களுக்கு பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் முதல் 20 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து நாளை காலை 6 மணிக்கு நடக்கும் மினி மரத்தானை துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஆனந்த சந்திரபோஸ் கொடியசைத்து துவங்கி வைக்கிறார்.
வெற்றி பெற்றவர்களுக்கு மைதானத்திலேயே பரிசுகள் வழங்கப்படும். மேலும் போட்டி தொடர்பாக விபரம் அறிய தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.