சசிகலா தலைமை... "சின்னம்மா" டிவியாக மாறிப் போன நியூஸ் சேனல்கள்.. கொந்தளிக்கும் தொண்டர்கள்!!
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என சில டிவி சேனல்கள் பிரசாரம் செய்கின்றன. இது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை: அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்துவதாக ஜெயா டிவி உள்ளிட்ட ஊடகங்கள் அரைநாளாக மக்களிடம் திணித்துக் கொண்டிருக்கின்றன. இது அதிமுக தொண்டர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா என்ற கூழைக்கூப்பாடு போட்ட ஜெயா டிவி இன்று பிற்பகல் வி.கே. சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக ஒரே ஒரு வீடியோ க்ளிப்பிங் போட்டு பிரேக்கிங் நியூஸ் போட்டது. சசிகலாவும் ஜெயலலிதா ஸ்டைலில் நிற்பதாக நினைத்துக் கொண்டு நிர்வாகிகளிடம் பேசுகிறார்.
அம்மா...
ஜெயா டிவி ஒவ்வொருவரையும் போனில் அழைத்து பேட்டி எடுக்கிறது. சைதை துரைசாமி பேட்டி அளிக்கும் சசிகலாவை எப்படி அழைப்பது என தெரியாமல் தடுமாறி சசிகலா அம்மையார் என்றார். அதே ஜெயா டிவி செய்தி வாசிப்பாளரும் கூட சசிகலா அம்மையார் என்றார் ..பின்னர் "அம்மா" என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்.
ஜெயா டிவியை மிஞ்சும் சேனல்கள்
ஜெயா டிவி இப்படியான ஒரு திணிப்பை செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.. ஆனால் ஜெயா டிவியை மிஞ்சும் அளவுக்கு இருக்கிற அத்தனை அதிமுக நிர்வாகிகளையும் அமைச்சர்களையும் போனில் அழைத்து சசிகலா தலைமை ஏற்கப்பட வேண்டும் என சொல்ல வைக்கின்றன- 'விசுவாசத்தை' காட்ட சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கும் செய்தியையே ஒளிபரப்புகின்றன பெரும்பாலான டிவி சேனல்கள்.
தொண்டர்கள் கொந்தளிப்பு
ஆனால் உண்மையிலேயே அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் கிஞ்சித்தும் சசிகலாவை ஏற்க மறுக்கிறார்கள்... இனியும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் தொடருவது கட்சிக்கே நல்லது அல்ல என்றே எச்சரிக்கின்றனர்.
ஊதுகுழல்...
இதைப் பற்றி கவலைப்படாமல் ஊடக தர்மம் என்பதையே அறவே மதிக்காமல் ஒரு தனிநபரின் ஊதுகுழலாகவே பெரும்பாலான டிவி சேனல்கள் ஒளிபரப்புவது காணச் சகிக்காத ஒன்றாகவே இருக்கிறது...