பீகார் முன்னணி நிலவரம்... தெளிவாக செய்தி சொன்ன சிஎன்என்-ஐபிஎன்.. குழப்பிய பிற டிவி சேனல்கள்
சென்னை: பீகார் சட்டசபைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது முன்னணி நிலவரத்தை வெளியிடுவதில் டிவி சேனல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன. குறிப்பாக ஆங்கிலச் சேனல்கள். இதனால் முதலில் பாஜக கூட்டணி பெரிய வெற்றி பெறுவதாக செய்திகள் வெளியாகி விட்டன. ஆனால் உண்மையில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.
காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதமாக முடிவை ஒளிபரப்பத் தொடங்கி விட்டன. ஏதோ எக்ஸிட் போல் முடிவு போல இது காணப்பட்டது.
என்டிடிவி பாஜக பெரும்பான்மையை நோக்கிப் போவது போல காட்டியது. நியூஸ் எக்ஸ் சானலோ ஐக்கிய ஜனதாதளம் முன்னணியில் இருப்பதாக கூறியது.
சரியான சொன்ன சிஎன்என் ஐபிஎன்
ஆனால் சிஎன்என் ஐபிஎன் டிவிதான் சரியான முடிவைக் கூறி வந்தது. அது நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி முன்னணி வகிப்பதாகவும்,. அதையொட்டி பாஜக வந்து கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்த டிவிதான் சற்று தெளிவான முறையில் முன்னணி நிலவரத்தைக் கூறி வந்தது.
இந்த டிவி நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நெருக்கமான நிறுவனமாக இருந்தபோதும் சரியான முறையில் முடிவைச் சொல்லி "மீடியா" என்ற பெயருக்கேற்ப பொறுப்புடன் நடந்து கொண்டது.
சிஎன்என் மட்டும் தெளிவாக செய்தி சொல்ல காரணங்கள் நிறையவே உள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் ஏஜென்சிகள் எனப்படும் செய்தி நிறுவனங்களை நம்பியுள்ளன. அவை கொடுப்பதை அப்படியே செய்தியாக வெளியிடுகின்றன. நேரடியாக வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்களை நிறுத்தி செய்தி சேகரிப்பது மிகவும் குறைவாகும்.
ஆனால் சிஎன்என் ஐபிஎன் அப்படி இல்லை. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் செய்தி சேகரிக்க ஆட்களை நியமித்து அவர்கள் கொடுத்த செய்தியை வைத்து இது முன்னணி மற்றும் வெற்றி தோல்வி நிலவரத்தை வெளியிட்டு வந்ததால் குழப்பம் இல்லாமல் செய்தி தர முடிந்துள்ளது.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈடிவியுடன் கை கோர்த்து சிஎன்என் செய்தி வெளியிட்டு வருகிறது. இதுதான் மற்ற சேனல்களை விட சிஎன்என் சற்று குழப்பமில்லாமல் செய்தி தர முடிந்ததற்கான காரணம்.
ராஜ்யசபா டிவி நிதீஷ் கூட்டணிக்கு முன்னணி என்று கூறி வந்தது. அதேசமயம், லோக்சபா கூட்டணி பாஜக கூட்டணிக்கு முன்னிலை என்று கூறி வந்தது.
இந்தக் குழப்பத்திற்குத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம்தான் முடிவு கட்டியது. 10 மணியளவில் நிதீஷ் கூட்டணி முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணைய செய்தி கூறியதைத் தொடர்ந்து அத்தனை ஊடகங்களும் சரியான பாதைக்குத் திரும்பினர்.