ஃபேன்.. டிவி.. நாற்காலி... சிறையில் சசிகலாவிற்கு கூடுதல் வசதிகள்
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறையில் கூடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிற்கு நாற்காலி, ஃபேன், டிவி ஆகிய கூடுதல் வசதிகள் செய்துத் தரப்பட்டுள்ளன.
21 ஆண்டுகள் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் அதிமுக பொதுக் செயலாளர் சசிகலாவிற்கு விதிக்கப்பட்டது. அவருடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், சசிகலா உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா மறைந்து விட்டதால், அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 15ம் தேதி பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா கேட்டுக் கொண்டதன் பேரில் இளவரசியுடன் அவர் ஒரே அறையில் அடைக்கப்பட்டார்.
அடம்பிடித்த சசிகலா
சிறையில் வீட்டு சாப்பாடு, மினரல் வாட்டர் கேட்டு சசிகலா அடம்பிடித்தார். ஆனால் இதனை எல்லாம் சுத்தமாக மறுத்துள்ள சிறை நிர்வாகம் , மற்ற சிறைக் கைதிகளுக்கு என்னென்ன கொடுக்கப்படுகிறதோ அவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. சசிகலா கேட்ட வேறு எந்த வசதிகளும் செய்துத் தரப்படவில்லை.
களியும்.. புளியோதரையும்..
வீட்டு சாப்பாடு மறுக்கப்பட்ட சசிகலாவிற்கு களி, புளியோதரை, சாம்பார் சாதம், தயிர்சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளே சிறையில் வழங்கப்படுகின்றன. இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் சசிகலா. முதல் வகுப்பு சிறைக்கு சென்றிருந்தால் இதில் இருந்து தப்பித்திருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
தரையில்தான் படுக்கை
சிறையில் சாதாரண வகுப்பு அறையில், கட்டில், ஃபேன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தது. முதல் வகுப்பில் என்றால், கட்டில், மெத்தை, ஃபேன், தனிக்கழிவறை போன்ற வசதிகள் இருக்கும். அத்துடன், பொதுவான ஓர் அறையில் இருக்கும் தொலைபேசியையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது எதுவும் சசிகலாவிற்கு கொடுக்கப்படாததால் கவலையாக இருக்கும் சசிகலா, ஃபேன், டிவி, நாற்காலி கேட்டு மனு செய்திருந்தார்.
டிவி, ஃபேன் வசதி
அவருடைய மனுவை ஏற்றுக் கொண்ட சிறை நிர்வாகம், இன்று அவருக்கு ஃபேன், டிவி, நாற்காலி ஆகிய கூடுதல் வசதிகளை செய்து தந்துள்ளது. இதனால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சி விட்டுக் கொள்ளும் சசிகலா, சீராய்வு மனு குறித்த யோசனையிலேயே நித்தமும் உள்ளாராம்.