போலீஸ் யுனிஃபார்ம் அணிவதே கேவலமாக உள்ளது என்று பேசிய டிவி நடிகை நிலானி கைது!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து பேசி வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
குன்னூர்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து பேசி வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மாதம் 22ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நிலானி வீடியோ
அப்போது தமிழ் சீரியல் நடிகை நிலானி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இலங்கையில் என்ன நடந்ததோ, அதே தான் தமிழ் நாட்டிலும் நடக்கும் எனவும், தமிழகத்தில் போலீசார் நடத்திய துப்பக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் என உருக்கமாக பேசியிருந்தார்.
உடம்பு கூசுகிறது
போலீஸ் உதவி கமிஷனர் உடை அணிந்தபடி நடிக்கும் காட்சி முடிந்தவுடன், அதே உடையில் வீடியோ காட்சியில் பேசியிருந்தார் நிலானி. போலீஸ் யூனிபார்மினை சுட்டிக்காட்டி இந்த உடையை அணிவதற்கே உடம்பு கூசுகிறது என்று கூறியிருந்தார். அவரது வீடியோ வைரலானது.
திட்டமிட்டு நடத்தப்பட்டது
தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது தற்செயலாக நடந்தது போன்று இல்லை. முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது போன்று உள்ளது. இங்கு இன்னும் ஒரு ஈழம் உருவாகிவிடக் கூடாது என்று கூறியிருந்தார்.
வைரலான வீடியோ
இன்னுமொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் பறி கொடுக்க வேண்டாம். கூடிய சீக்கிரம் இவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் வகையில் புரட்சி வெடிக்க வேண்டும் என்று பேசியிருந்தார் நிலானி. அவரது வீடியோ வைரலானது.
4 பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து அவர் மீது பாஜகவினர் வடபழனி போலீஸில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து சின்னத்திரை நடிகை நிலானி மீது கடந்த 24ஆம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குன்னூரில் கைது
இந்நிலையில் நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார். வடபழனி போலீசார் குன்னூரில் அவரை கைது செய்துள்ளனர்.