வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட வேல்முருகன் கட்சியினர்!
சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக இன்று சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஆயகர் பவனை முற்றுகையிட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
காவிரி உரிமையை மீட்கும் நோக்கிலும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்துள்ள தாக்குதலைக் கண்டித்தும், இந்தத் தாக்குதலுக்கு உடந்தையான கர்நாடக மாநில அரசையும் இந்திய அரசையும் கண்டித்தும், வணிகர் சங்கங்களும் உழவர் சங்கங்களும் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் போராட்டத்திற்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 11 அமைப்புகளும் ஆதரவு அளித்தன. அதன் ஒரு பகுதியாக இன்று மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறையின் அலுவலகமான ஆயகர் பவனை வந்தடைந்த தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினார்கள்.
இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.